ராதாரவி மட்டுமல்ல.. இந்த மேடையில் உள்ள அத்தனை பேருமே இழி பிறவிகள்தான்!
சென்னை: மாற்றுத் திறனாளிகள்.. இந்த வார்த்தையை மதித்ததே திமுகதான். முதல்வராக கருணாநிதி இருந்தபோது அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பெயர் இது. தனித் துறையும் கண்டவர் கருணாநிதி. ஆனால் அந்த வரலாறு கூட தெரியாமல், மதிக்காமல் வாய்க்கு வந்ததைப் பேசி ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளின் வேதனையையும் சம்பாதித்துள்ளார் நடிகர் ராதாரவி.
வாய்த் துடுக்குக்குப் பெயர் போனவர் ராதாரவி. ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் மனதை புண்படுத்தும் எந்த செயலும் வன்முறைக்குச் சமமானது. கடுமையான கண்டனத்துக்குரியது. அதிலும் உடல் ஊனத்தை கொச்சைப்படுத்தியும், விமர்சித்தும் பேசுபவர்களை மனிதக் கணக்கில் கூட சேர்க்க முடியாது.
ஆனால் ரொம்பக் கேவலமாக நடந்து கொண்டுள்ளார் ராதாரவி. நீயும் மனிதன்தானா என்று கேட்கும் அளவுக்கு அவரது கடுமையான செயல் அமைந்துள்ளது. கருணாநிதிக்கு சக்தி இருந்திருந்தால் இந்நேரம் இவரை கட்சியை விட்டே நீக்கியிருப்பார். இந்த நிமிடம் வரை ராதாரவி திமுகவில் நீடித்திருப்பதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

இவருக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால்
கொஞ்சம் கூட மனித நேயமோ, மனிதாபிமானமோ இல்லாமல் வாயிலிருந்து அனலைக் கக்கியுள்ளார் ராதாரவி. இவருக்கு ஒரு பிள்ளையோ அல்லது பேரப் பிள்ளையோ இருந்திருந்தால் இப்படிப் பேசியிருப்பாரா என்ற கேள்வியை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. வாய் இருந்தால், மேடை கிடைத்து விட்டால், என்ன பேசினாலும் சிரிக்கவும், கை தட்டவும் நாலு பேர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா?

மனிதநேயம் கூட இல்லாமல் என்ன மனிதனோ
அடிப்படை மனித உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவரைப் போன்றவர்கள்தான் இன்று அரசியலில் அபரிமிதமாக உள்ளனர் என்பதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு. இவர்கள் பேசுவதை எல்லாம் நாம் கேட்க வேண்டும். அது நம் தலையெழுத்து.

தூக்கி எறிந்திருக்க வேண்டாமா
இவ்வளவு மோசமாக பேசியுள்ளாரே இந்த ராதாரவி, இவர் மீது திமுக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா இந்நேரம். மாற்றுத் திறனாளிகளுக்கு புது மரியாதை கொடுத்தது இந்தக் கட்சிதானே. அது இந்த நேரத்திற்கு பொங்கி எழுந்திருக்க வேண்டாமா. மிகக் கடுமையாக ராதாரவியை திட்டியிருக்க வேண்டாமா. நீ இந்தக் கட்சிக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்திருக்க வேண்டாமா.

மிக மோசமானவர்கள்
ராதாரவியை விட மிக மோசமானவர்கள் அந்த மேடையில் உட்கார்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த அந்தக் கும்பல்தான். அதிலும் முன்வரிசையில் உட்கார்ந்துள்ள அந்த பெண்மணி அப்படி ரசித்து சிரிக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை இப்படி இருந்திருந்தால் இப்படி சிரித்திருக்க மாட்டார். ராதாரவி மட்டுமல்ல அந்த மேடையி்ல் அமர்ந்துள்ள, அவரது பேச்சை ரசித்து சிரித்த அத்தனை பேரும் மனிதர்களாகவே இருக்க தகுதியற்றவர்கள்.

கட்சியை விட்டு நீக்குங்கள்
திமுக இதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ராதாரவி மட்டுமல்லாமல், கேவலமான அவரது செயலுக்குத் துணையாக இருந்து ரசித்து சிரித்த அத்தனை பேரையும் குறைந்துத கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவர்களது செயலால் மனம் புண்பட்டுள்ளவர்களுக்கு இது மட்டுமே ஓரளவாவது ஆறுதலைத் தர முடியும்.












Click it and Unblock the Notifications