4வது நாளாக சிறுத்தை தேடுதல் வேட்டை.. தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். கடந்த 3ஆம் தேதி இரவு எடுக்கப்பட்ட சிறுத்தை புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து நான்கு நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை.
எனினும், நேற்றும் இன்றும் அப்பகுதியில் இரண்டு ஆடுகள் சிறுத்தையால் குதறப்பட்டு உயிரிழந்து கிடந்தன. இதனால், சிறுத்தை இன்னும் அந்தப் பகுதியில் தான் சுற்றித் திரிகிறது என்பது தெரியவந்தது. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் வெளியே வராமல் இருக்கும் சிறுத்தை இரவு நேரத்தில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை பதுங்கியுள்ள பகுதியில் தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சிறுத்தை சிக்கவில்லை.
சிறுத்தையை பிடிக்கும்பணி இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்யும் தெளிவான படத்தை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 3ஆம் தேதி இரவு இந்தப் புகைப்படம் எடுக்கப்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications