உள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இரண்டு பிரதான கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இதனால் அவர்களை பிடித்து எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வர வேண்டும் என ஒரு பெருங்கூட்டமே இரண்டு கட்சிகளிலும் சுற்றி வருகிறது.

விரைவில் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் அதுபற்றிய பரபரப்பு பற்றிக்கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

மாவட்டச் செயலாளர்கள்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் தான் தேர்வு செய்து வருகின்றனர். இதனால் எப்பாடுபட்டாவது அவர்களை பிடித்து தேர்தலில் சீட் வாங்கி விட எல்லா மாவட்டங்களிலும் தனி லாபியே நடந்து வருகிறது. இதில் விநோதம் என்னவென்றால் வடதமிழகத்தில் உள்ள ஒரு ஊரில் போட்டியிட விரும்பும் நபர், சீட்டுக்காக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சரை சந்தித்த கதையெல்லாம் நடந்திருக்கிறது.

நகை அடகு
கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகி ஒருவர், தனது மனைவி, மகள் நகைகளை எல்லாம் கூட அடகு வைத்து பணத்தை வங்கியில் போட்டு பேங்க் பேலன்ஸ் ஸ்டேட்மெண்டை வாங்கி வைத்துள்ளார். அதைக்காட்டி தன்னால் செலவு செய்ய முடியும் என்பதை மாவட்டச் செயலாளருக்கு உணர்த்தி சேர்மன் சீட் பெறும் முடிவில் இருக்கிறார்.

புகார்கள்
கட்சி பாகுபாடின்றி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பேச்சை மீறாத நபர்களை மட்டும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண வைக்க திட்டமிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இப்போதே அது குறித்த பஞ்சாயத்துகளும் பல மாவட்டங்களில் இருந்து சென்னை வருகிறது.












Click it and Unblock the Notifications