Pamban bridge: பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் திடீர் நிறுத்தம்! வேறு எங்கு நிற்கும்?
ராமேஸ்வரம்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலால் ராமேஸ்வரத்தில் சூறைக் காற்று வீசிவரும் நிலையில் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த புயலுக்கு 'டிட்வா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. புயல் மேலும் தீவிரமடைந்து, அடுத்த 36 மணி நேரத்தில், ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும். இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்டவைகளில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தென் மாவட்டங்களிலும் வடமாவட்டங்களில் சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த டிட்வா புயலால் ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. இதனால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் மண்டபம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. பழைய பாம்பன் பாலம் பழுதடைந்து புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு வரும் ரை அனைத்து ரயில்களும் மண்டபம் ரை மட்டுமே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதஸ்வாமி கோயிலில் மழை நீர் புகுந்துள்ளது. கனமழை எதிரொலியாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications