மண் காண்டிராக்ட் வேண்டுமா? பணம்தான் தேவையா? தினகரன் கோஷ்டிக்கு வலை வீசும் திவாகரன்
தினகரன் அணியில் இருப்பவர்களை வளைக்கும் பேரத்தை நடத்தி வருகிறார் திவாகரன்.
Recommended Video

சென்னை: தினகரன் அணியில் இருப்பவர்களை, திவாகரன் அணிக்கு இழுக்கும் பணிகள் வேகம் அடைந்து வருகின்றன. 'உங்களுக்குத் தேவையானதை பாஸ் பார்த்துக் கொள்வார். அவரால் பதவி வாங்கிய இரண்டு அமைச்சர்களும், உங்களுக்கு நல்லது செய்வார்கள்' எனத் தூண்டிலை வீசிக் கொண்டிருக்கின்றனர்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நாள்தோறும் கடிதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தினகரன் தரப்பும் திவாகரன் தரப்பும் மாறி மாறிப் புகார்களை அனுப்பி வருகின்றனர்.

இதில் மொட்டைக் கடிதங்கள் ஏராளம் இருப்பதாகப் புலம்புகின்றனர் மன்னார்குடி குடும்பத்தினர். "இந்தக் கடிதங்களை எல்லாம் படிக்கும் மனநிலையில் சசிகலா இல்லை. இவர்களது சண்டையை எரிச்சலுடன் வேடிக்கை பார்த்து வருகிறார்" என ஆதங்கப்பட்ட மன்னார்குடி பிரமுகர் ஒருவர், " இந்த விவகாரத்தை ஒரு போன் காலில் பேசி சரிசெய்திருக்கலாம். இந்தளவுக்கு வளரவிட்டிருக்க வேண்டாம்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திவாகரன் தரப்பினர் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் அ.ம.மு.கவினர். இதுகுறித்து எங்களிடம் ஆதங்கப்பட்டனர். அதேநேரம், 'திவாகரனுக்கு உடல்நிலைதான் சரியில்லை என நினைத்தேன். மனநிலையும் சரியில்லாமல் போய்விட்டது' என தினகரன் பேசியதையும் உறவினர்கள் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர்.
'என்னப்பா இவங்க... இப்படி சட்டையைக் கிழிச்சுக்கறாங்க. அப்ப நாங்க எங்கதான் போறது?' என சின்னம்மா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். இந்தநிலையில், தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் திவாகரன் இருக்கிறார்.
டி.டி.வி பக்கம் உள்ள நிர்வாகிகளை எல்லாம் தன்பக்கம் இழுப்பதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறார். இதற்கான பணியில் ஒரு குழுவே இறங்கியுள்ளது. ஒருகாலத்தில் திவாகரனுக்கு நெருக்கமாக இருந்து, தற்போது டி.டி.வி அணியில் இருக்கும் முக்கியப் புள்ளியிடம் பேசியிருக்கிறார்கள்.
இந்தப் பேச்சின்போது, 'அந்தப் பக்கம் இருந்து எவ்வளவு பேர் வருவாங்கன்னு சொல்லுங்க. நம்ம பாஸால் பதவியை அனுபவிக்கும் இரண்டு அமைச்சர்களும் நமக்கு சாதகமா இருக்காங்க. ஆளும்கட்சி சப்போர்ட்டும் நமக்குத்தான். மண் காண்ட்ராக்ட் வேணுமா...பணம் வேணுமா? என்ன தேவைன்னாலும் தயங்காம கேட்கச் சொல்லுங்க. டி.டி.விகிட்ட இருந்தா எந்தப் பயனும் கிடையாது. உண்மையான தொண்டர்கள் நம்மபக்கம்தான் இருக்காங்க' எனப் பேசியுள்ளனர்.
இதற்குப் பதில் கொடுத்த அந்தப் புள்ளியோ, ' அண்ணே...கொஞ்சநாள் போகட்டும். நிலைமை எப்படிப் போகுதுன்னு பார்த்துட்டு எங்க முடிவைச் சொல்றோம். நீங்களும் எங்களுக்கு முக்கியம்' எனப் பேசியுள்ளனர். இதே பாணியில் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் வலைவிரித்துள்ளனர் திவாகரன் தரப்பினர். சிலர் திவாகரன் தரப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர்" என்றார் விரிவாக.
திவாகரன் தரப்பினரின் தூது குறித்து அறிந்த தினகரன், கொதிப்பில் இருக்கிறார். '40 வருஷமா அவர் கூட இருந்த சிவராஜையும் காமராஜையுமே அவரால தக்க வைக்க முடியல. இதுல என் அமைப்பை உடைக்கப் பார்க்கிறாரா? அவர் நினைப்பது எதுவும் நடக்காது' என ஆவேசப்பட்டிருக்கிறார். திவாகரன் தரப்பினரின் தூது முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications