ஜெ. மரணம் முதல் தினகரன் வரை- அத்தனை சர்ச்சை ஃபேஸ்புக் பதிவுகளையும் நீக்கிய திவாகரன் மகன் ஜெயானந்த்!
ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் வரையிலான சர்ச்சைக்குரிய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒரேடியடியாக அழித்திருக்கிறார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
சென்னை: சசிகலா குடும்பத்து ரகசியங்களை போட்டுடைத்து வந்த திவாகரன் மகன் ஜெயானந்த் தம்முடைய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகவே அழித்துவிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா குடும்பத்தின் கை அதிமுகவில் ஓங்கியது. அதேநேரத்தில் சசிகலா குடும்பத்தின் அடுத்த தலைமுறையிலும் அரசியல் கோதாவில் குதித்தது.
இதில் சசிகலாவின் தம்பி மகன் திவாகரன், சசிகலாவின் அண்ணன் மறைந்த ஜெயராமன் மகன் விவேக் இருவரும்தான் மல்லுக்கட்டி வந்தனர். திவாகரனுக்காக ஜெயான்ந்தும் தினகரனுக்காக விவேக்கும் களமிறங்கினர்.

எல்லாமும் விவேக்
சசிகலாவோ விவேக்கையே அதிகம் நம்பினார். இந்த விவேக் வசம்தான் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு, ஜாஸ் சினிமாஸ் என சசிகலா குடும்பத்துக்கான வருவாய் மூலமே இருந்து வருகிறது. தற்போது தினகரன் சிறைக்குப் போன நிலையிலும் விவேக்தான் அத்தனையையும் பார்த்து வருகிறார்.

அப்பல்லோ வீடியோ
இதனிடையே ஜெயானந்த் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதா- சசிகலா இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் உரையாடும் வீடியோ இருக்கிறது. அதை வெளியிடலாமா? என மிரட்டியிருந்தார். இதனை நமது ஒன் இந்தியா தமிழ் தளம் முதன் முதலாக வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இது தேசிய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெயானந்த்- விவேக் மோதல்
இதனைத் தொடர்ந்து தினகரனை அதிமுகவினர் ஒதுக்கி வைத்தபோது அதை வரவேற்றிருந்தார் ஜெயானந்த். ஆனால் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்திலேயே விவேக் இதை கடுமையாக எதிர்த்து மல்லுக்கட்டியிருந்தார். இப்படி ஜெயானந்த்- விவேக் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்து வந்தது.

லீலைகள் அம்பலம்
இதனால் ஜெயானந்த், விவேக் இருவரும் பரபஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் இதுவரை வெளிவராத ரகசியங்களை அம்பலப்படுத்தி வந்தனர். விவேக் சட்டப்படிப்பே படிக்காமல் சட்டம் படித்ததாக ஏமாற்றி வருகிறார் என சொன்னது ஜெயானந்த் தரப்பு. அதேபோல் ஜெயானந்த், பாஸ் என்கிற பாஸ்கரன் மகளை சிறுவயது முதலே காதலித்து வருகிறார்... அவருக்கு திருமணம் நடக்கப் போகிறது... சசிகலா சிறையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்கிறாரே என கொளுத்திப் போட்டது விவேக் தரப்பு.

திடீர் முடிவு
இந்த நிலையில் ஜெயானந்த் தம்முடைய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகவே அதிரடியாக நீக்கியிருக்கிறார். அத்துடன் ஜெயானந்த் தலைமையை ஏற்க தயார் என்றெல்லாம் கூவிய அடிப்பொடிகள் ஒருவரை கூட நண்பர்கள் பட்டியலிலும் ஜெயானந்த் வைக்கவில்லை. தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தையே கழுவி சுத்தம் செய்திருக்கிறார் ஜெயானந்த்.












Click it and Unblock the Notifications