ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது.. எதுவும் நடக்கலாம் - மிரட்டும் திவாகரன்
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
சென்னை: பதவியை காப்பாற்றிக்கொள்ளவே இரு அணிகளும் இணைந்துள்ளதாகவும், இந்த இணைப்பை எல்லா எம்எல்ஏக்களும் விரும்பவில்லை என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா என்று உத்தரவாதம் தரமுடியாது என்றும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின்னர் மன்னார்குடியில் இருந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் திவாகரன்.

நிராயுதபாணி
சசிகலாவை அன்றைக்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்தவர்கள்தான், இன்றைக்கு நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர். பொதுச்செயலாளர் சிறையில் இருக்கிறார். நிராயுதபாணியாக இருப்பவரை ஒதுக்கலாமா?

எங்கள் எம்எல்ஏக்கள்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சம்மதமில்லை.
தினகரனிடம் 18 எம்எல்ஏக்களும், என்னிடம் 8 எம்எல்ஏக்களும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்களுக்கு இதில் விருப்பமில்லை.

வெற்றி பெறாது
கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரின் முயற்சி எப்போதும் வெற்றி பெற்றதில்லை. இதுவும் வெற்றி பெறாது. 3 பேருக்காக 122 பேரின் எண்ணத்தை மாற்றுவதா?

எல்லாம் வீணாகி விட்டது
சின்னம் முடக்க காரணமாக இருந்தவர்கள் ஓ.பன்னீர் செல்வம்தான். கட்சி முடங்க காரணமாக இருந்தவர் அவர்தான். மிகப்பெரிய கேலிக்கூத்து அரங்கேறியது. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நாங்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்தோம், அத்தனையும் இப்போது வீணாகி விட்டது போல உள்ளது.
Recommended Video


எதுவும் நடக்கலாம்
அன்றைக்கு பொதுச்செயலாளராக பதவியேற்கச் சொன்னவர்கள்தான் இன்றைக்கு நீக்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம். இந்த ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று எச்சரித்துள்ளார் சசிகலா சகோதரர் திவகாரன்.












Click it and Unblock the Notifications