தொடங்கியது தேமுதிக நேர்காணல்.. 10 தொகுதிகளுக்கு இன்று இன்டர்வியூ!
சென்னை: தேமுதிகவில் இன்று முதல் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது.
யாருடன் கூட்டணி என்பது தெரியவில்லை. தனியாகப் போட்டியா என்பதும் புரியவில்லை. இந்த நிலையில் அது பாட்டுக்குத் தனது வேலைகளை தேமுதிக பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள அக்கட்சி இன்று தனது நேர்காணலைத் தொடங்கியது.
40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளது தேமுதிக. 40 தொகுதிகளுக்கும் தற்போது அது வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் உள்ளது.
இன்று முதல் நேர்காணல்
இந்த 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பி மனுக்கள் கொடுத்துள்ளவர்களிடம் இன்று முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.
பத்துப் பத்து தொகுதிகளாக
பத்துப் பத்து தொகுதிகளாக நேர்காணல் நடைபெறுகிறது. இன்று 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. விஜயகாந்த் நேர்காணலை நடத்தினார்.
எந்த பத்து தொகுதிகள்...
தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), சிதம்பரம் (தனி), கடலூர், விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுக்காக விண்ணப்பித்திருந்தவர்கள் இன்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.
நாளை
நாளை, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
11ம் ,தேதி
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி (தனி), தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய தொகுதிகளுக்கு 11-ம் தேதி நடைபெறுகிறது.
12ம் தேதி
12ம் தேதியன்று வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறும்.
அதற்குப் பிறகுதான் கூட்டணி
இந்த நேர்காணல் அனைத்தையும் முடித்த பிறகே தேமுதிக யாருடன் கூட்டணிக்கு வரும் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவார் விஜயகாந்த் என்கிறார்கள்.