ஒருதலைபட்சமாக வேட்பாளரை விஜயகாந்த் அறிவித்ததால் குழப்பம்- தமிழக பாஜக பொறுப்பாளர் சாடல்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சாடியுள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இடம்பெறுவது குறித்து தேமுதிக, பாமக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சில தொகுதிகளுக்காக இந்த பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென முதல் கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வேட்பாளர்களை ஒருதலைபட்சமாக அறிவித்த கையோடு பிரசாரத்தையும் அவர் தொடங்கிவிட்டார்.
இது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து நேற்று இரவு பாஜக தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவதற்கு முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. தே.மு.தி.க.வுடன் சில தொகுதிகள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த முடிவை அகில இந்திய தலைவர் தான் அறிவிப்பார் என்றார்.
இதனிடையே பா.ஜ.க.வினர் நேற்று இரவு தே.மு.தி.க. தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications