ஒரே "கலகல"தான்.. மாறி விட்டார் விஜயகாந்த்.. தேமுதிகவினரே உற்சாகமாக சொல்கிறார்கள்! #vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெகுவாக மாறி விட்டார் என்றும் முன்பு போல அவர் தீவிரமாக செயல்படத் தயாராகி வருவதாகவும் அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.
தேமுதிகவின் 12வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் இன்று கோயம்பேட்டில் களை கட்டியிருந்தன. கட்சி அலுவலகத்தில் கட்சியினர் புடை சூழ விஜயகாந்த் கட்சிக் கொடியேற்றி கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. செம உற்சாகத்துடன் காணப்பட்டார் கேப்டன். அவரைப் பார்த்து தொண்டர்களும் குஷியாக அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
இந்த நல்ல நாளில் கட்சியினருடன் முன்பு போல இரண்டறக் கலந்து இனிமேல் தொடர்ச்சியாக கட்சியினரைச் சந்திக்கவும் விஜ.காந்த் திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறுகின்றனர். சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் சுதீஷ் காரணம் என்றும் விஜகாந்த்தே ஒப்புக் கொண்டதாகவும் நிர்வாகிகள் கூறுகிறார்கள். இனிமேல் தான் பார்த்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளாராம்.
செம தெளிவாக மாறியுள்ளார்
இதுகுறித்து கட்சியினர் கூறுகையில் கட்சி நிர்வாகம் தொடர்பாக இப்போது விஜயகாந்த் தெளிவாகி விட்டார். சுதீஷின் வேலை இளைஞர் அணி மட்டுமே என்று கூறி விட்டாராம். கட்சியின் முக்கிய முடிவுகளை தான் மட்டுமே இனி எடுக்கவுள்ளதாகவும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளாராம்.
உடம்பு சரியாகி விட்டது
மேலும் அவருக்கு இப்போது உடல் நிலை முன்பை விட நன்றாக தேறி விட்டதாம். பேசும்போது முன்பு குழறிக் குழறி பேசினார். இப்போது அதுவும் கிட்டத்தட்ட சரியாகி விட்டதாவும். தினசரி யோகா, உடற்பயிற்சி, ஓய்வு என்று இருந்ததால் தற்போது கிட்டத்தட்ட பழைய நிலைக்கு அவர் திரும்பி விட்டதாக கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
ஷூட்டிங் முடிச்சுட்டு வந்துர்றேன்
தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வரும் விஜயகாந்த் அதை முடித்து விட்டு வந்து விடுகிறேன். அதன் பின்னர் தினசரி உங்களைச் சந்திக்கிறேன் என்று கட்சியினரிடம் கூறியுள்ளாராம். தினசரி தொண்டர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் கட்சியினரிடம் கூறியுள்ளாராம்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை
அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிட வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். இப்போது உள்ள நிலையில் நிச்சயம் அதிமுக அல்லது திமுகதான் அதிக இடங்களை வெல்லப் போகின்றன. இருவரும் பணத்தை இறக்கி விடுவார்கள். நம்மால் சமாளிக்க முடியாது. எனவே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதுகிறாராம் விஜயகாந்த்.