அட நம்ம கேப்டனா இது, இவ்வளவு தெளிவா அரசியல் பத்தி பேசுறாரே!
உடல்நலக்குறைவிற்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேப்டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஃப்ரெஷ்ஷாக காணப்படுகிறார்.
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது தொலைக்காட்சிக்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து அளித்துள்ள பேட்டி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை கூட்டியுள்ளது.
ஏடாகூடப் பேச்சுகள், சொல்ல வர விஷயத்தை விட்டு வேற விஷயத்துக்கு சட்டுன்னு தாவுறது, மேடையிலயே கட்சியினருக்கு கொட்டு, பளார் அறைகள் என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் அரசியல் பொதுமேடைகள். ஆனால் விஜயகாந்த் தனது தொலைக்காட்சியான கேப்டன் டிவியில் தமிழக அரசியல் குறித்த கேள்விகளுக்கு விறுவிறுப்பான பதில்களை அளித்துள்ளார்.
எப்போதும் தள்ளாடிய நடையுடன், சிவந்த கண்ணோடு பார்த்தே பழகிய கேப்டன் இந்தப் பேட்டியில் வெள்ளை பேண்ட், சட்டையில் பளீச் முகத்துடன் நெறியாளரின் கேள்விகளுக்கு பதிலக்கிறார்.

100 நாள் வேதனை
தமிழக முதல்வர் எடப்பாடி அரசின் 100 நாள் ஆட்சி சாதனையல்ல வேதனை தான். ஏனென்றால் ஓராண்டு பேசும் நூறாண்டு சாதனை, பல்லாண்டு பேசும் ஈராண்டு சாதனைன்னு சொல்றாங்க ஜெயலலிதா வழியிலேயே எடப்பாடியும் செய்து வருகிறார் ஒரு செய்தித்தாள் விடாமல் விளம்பரம் செய்வது, ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது இது தான் இவர்களின் சாதனை.

கமிஷன் வாங்க மிரட்டல்
ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட எல்லாருமே ஃபிராடு தான். பாலில் ரசாயனம்னு நிரூபிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டியது தான. தனியர் பால் நிறுவனங்கள் சுதாரித்து தனக்கு வரவேண்டிய கமிஷனை வாங்க வேண்டும் என்பதற்காகவே ராஜேந்திர பாலாஜி ஸ்டண்ட் செய்கிறார். 15 நாள் ஏன் டைம் உடனே நிரூபிக்க வேண்டியது தானே எல்லாமே பணம் சம்பாதிப்பதற்கான உத்தி தான்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
ஓ.பிஎஸ், ஈபிஎஸ் இரண்டு அணியுமே ஒன்று தான். புத்தர் போதி மரத்துக்கு கீழே உட்கார்ந்த மாதிரி ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்தால் அவருடைய புத்தி தான ஓபிஎஸ்க்கும் வரும். காமராஜர் சொன்னது போல இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அக்கறை இல்லை
விவசாயிகள், மக்கள் மீதெல்லாம் இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. மழைநீரை சேமிக்கும் திட்டம் எதுவுமே அரசிடம் இல்லை. மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம். 500 டிம்சி தண்ணீர் மழையால் கடந்த ஆண்டு கிடைத்தது ஆனால் அதை சேமிக்க தடுப்பணை இல்லாததால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.
தகிடுதத்தம்
வெள்ளம் வந்தால், வெள்ள நிவாரணம்,வறட்சி வந்தால் வறட்சி நிவாரணம். இரண்டையும் மத்திய அரசிடம் இருந்து வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு செல்வது தான் எந்த அரசாக இருந்தாலும் செய்யும் தகடுதத்தம், என கேப்டன் விஜயகாந்த் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications