பாமகவிடமிருந்து தேமுதிக பறித்த சேலத்து மாம்பழம் சுதீஷுக்கே...!
சென்னை: பாமகவிடமிருந்து கடும் போராட்டத்துக்குப் பி்ன்னர் தேமுதிக தட்டிப் பறித்துள்ள சேலம் தொகுதியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடவுள்ளார்.
முதலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிடவே சுதீஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது பாமகவின் கோட்டை என்பதால் ரிஸ்க் எடுக்க பயந்த அவர் கடைசி நேரத்தில் சேலத்திற்கு மாற தீர்மானித்தார். இதனால்தான் சேலத்தை தேமுதிக பாஜகவிடம் கடைசி நேரத்தில் கோரியது.
ஆனால் பாமகவும் சேலத்தையே கேட்டதால் சிக்கலானது. இந்த விவகாரத்தில் பாஜகதான் சிக்கலை ஏற்படுத்தியதே என்றும் பேசப்பட்டது. எப்படியே இப்போது சேலம் தேமுதிகவுக்கே வந்து விட்டது.
சேலம் பாரம்பரியமான தொகுதிகளில் ஒன்று. ரங்கராஜன் குமாரமங்கலம் உள்பட பல முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி இது. தங்கபாலு வென்ற தொகுதியும் ஆகும்.
வீரபாண்டியார் இருந்தவரை சேலம் திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது வீரபாண்டியார் இல்லை. எனவேதான் பாமக எப்படியாவது சேலத்தில் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது தேமுதிக. இதனால் பாமக நொந்து போய் விட்டது.
கடந்த முறை கள்ளக்குறிச்சியில்
இப்போது சேலத்தில் சுதீஷ் போட்டியிட சிக்கல் நீங்கியுள்ளது. சுதீஷ் தேர்தலி்ல போட்டியிடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2009 லோக்சபாத் தேர்தலின்போது அவர் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
தற்போது சேலத்தில் நிற்கிறார். அவருடன், தர்மபுரியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி நிற்கிறார். இருவரும் வென்றால், எதிர்காலத்தில் டெல்லி முதல் தமிழகம் வரை தேமுதிக, பாமகவின் வாரிசுத் தலைவர்களாக மிளிர்வார்கள் என்று நம்பலாம்..