பிடிவாரண்ட் எச்சரிக்கை: விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார் விஜயகாந்த்

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த தே.மு.தி.க பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறை ஆஜரான விஜயகாந்த், அதன் பிறகு தொடர்ந்து ஐந்து முறை ஆஜராகாமல் வாய்தா வாங்கினார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகாத விஜயகாந்த்க்கு ஜாமீனுடன் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் ரிஷிவந்தியம் புறப்பட்டு சென்றார் விஜயகாந்த்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு எப்பொழுதாவது தலைகாட்டும் விஜயகாந்த், அவதூறு வழக்கில் ஆஜராக விழுப்புரம் வரும்பொழுது தனது தொகுதியையும் எட்டிப்பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications