தேமுதிக நகர செயலாளர் சரவணன் கொலை வழக்கு: சரணடைந்த நான்கு பேருக்கு 7 நாள் நீதிமன்ற காவல்
காஞ்சிபுரம் தேமுதிக நகர செயளாலர் சரவணன் கொலை வழக்கில் நான்கு பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
வேலூர்: தேமுதிக நகர செயலாளர் சரவணண் கொலை வழக்கில் பாலிமேடு பகுதியை சேர்ந்த பிரபாகர், கோகுல், கார்த்தி, காக்கா சுரேஷ் ஆகிய நான்கு பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பல்லவமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). தேமுதிக தலைமைக்கழக பேச்சாளராகவும், கட்சியின் நகர துணை செயலாளராகவும் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு ரேவதி என்ற மனைவியும், யுவா (7), சாம்ராஜ் (5) என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு சுமார் 10.15 மணியளவில் இவர் வீட்டு அருகே உள்ள பகுதியில் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பைக்கை நிறுத்தியுள்ளார் அப்போது அங்கே மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டு வாசலில் வைத்து சரவணனை மடக்கி வெட்டியது.
அதிரச்சி அடைந்த சரவணன் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். சாலையில் தப்பி ஓட முயன்றவரை விடாமல் விரட்டி விரட்டி வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் மற்றும் ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்ப பிடித்தபடி சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சரவணண் கொலை வழக்கில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. அதில் பாலிமேடு பகுதியை சேர்ந்த பிரபாகர் , கோகுல் , கார்த்தி , காக்கா சுரேஷ் ஆகிய நால்வர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் நான்கு பேரையும் வரும் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து 4 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.