7ம் தேதி செயற்குழுக் கூட்டம், மறக்காம வந்துருங்க, ஆனா "கேப்டனுக்கு" மாலை மட்டும் போட்டுராதீங்க!
சென்னை: தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி கோவையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
தே.மு.க.வின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் வருகின்ற 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கோயம்புத்தூர், ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் நடைபெற உள்ளது. தே.மு.தி.க. தலைவ ர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகியோர் மட்டும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையுடன் வருகை தந்து, கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டை அந்தந்த மாவட்ட கழக செயலாளர்களிடம் இருந்து மேற்கண்ட நிர்வாகிகள் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தங்களுடைய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக அழைத்துக்கொண்டு கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.
தே.மு.தி.க. தொண்டர் அணியினரின் வழிகாட்டுதல்படி கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். செல்போன், கேமிரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார். எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது.
மேற்கண்ட அறிவிப்புகளை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நிர்வாகிகளும் பின்பற்றி தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications