2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை
கோவை: கோவை அருகே நடைபெற்றுவரும் தேமுதிக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அரங்கினுள் செல்போன் கொண்டுவர நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் 750 நிர்வாகிகள் பங்கேற்ற்றுள்ளனர். மத்திய அரசு உடனான தேமுதிக உறவு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் இதுவரை சென்னையில்தான் நடைபெற்று வந்தன. முதல் முறையாக 9வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கோவையில் நடைபெறுகிறது.

கோவையில் தேமுதிகவினர்
கோவை வெள்ளக்கிணறு ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் இன்று காலை கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 114 செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் 285 பேர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட முதல்நிலை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அணி அணியாக
செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை முதலே ஸ்ரீலட்சுமி நாராயண மஹாலுக்கு வரத் தொடங்கினார்.
அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், அவர்கள் தங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விமானம் மூலம் விஜயகாந்த்
செயற்குழு,பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று விமானம் மூலம் கோவை வந்த விஜயகாந்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நிர்வாகிகளுடன் சந்திப்பு
பின்னர் கோவை-அவினாசி சாலையில் உள்ள ஓட்டலில் நிர்வாகிகளை சந்தித்தார். அதன் பின்னர் அங்கேயே தங்கியிருந்தார். இன்று காலை அங்கிருந்து கிளம்பி வெள்ளக்கிணறு ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலுக்கு வந்தார் விஜயகாந்த்.
அரசியல் முகவரியே
செயற்குழு கூட்டம் நடைபெற்ற இடத்தில் விஜயகாந்தை வரவேற்று வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கட்சியின் கொடி தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக எங்களில் அரசியல் முகவரியே என்ற வாசகம் விஜயகாந்தை மிகவும் கவர்ந்தது.
செயற்குழு பொதுக்குழு
காலை 11 மணியளவில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழு கூட்டம் நடந்தது. பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
என்ன செய்யலாம்?
கூட்டத்தில் மத்திய, மாநில அரசியல் நிலைமைகள் குறித்தும், தே.மு.தி.க. வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
2016 சட்டமன்ற தேர்தல்
மேலும் வருகிற 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி தே.மு.தி.க. நிர்வாகிகளின் கருத்து என்ன? என்று விஜயகாந்த் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் வியூகம்
சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான வியூகங்கள் குறித்தும் விஜயகாந்த் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications