ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்துவதா? விஜயகாந்த் கண்டனம்
ஜல்லிக்கட்டுக்கு நடத்த வலியுறுத்தி திரண்டவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் திருவிழாவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பல இடங்களில் தடியடி நடத்தினர். இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை. இந்தாண்டு உரிய வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை காணப்படும் என மத்திய மாநில அரசுகளைச் சார்ந்தவர்கள் தமிழக மக்களுக்கு தொடர்ந்து உறுதி மொழி அளித்து வந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறப்போகிறது என்ற மகிழ்ச்சியில் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்த இளைஞர்களுக்கு பொங்கல் நாளிலும் அதற்கான அறிவிப்பு வராததால் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் பாரம்பரிய முறைப்படி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கு தன்னிச்சையாக இந்த வீரவிளையாட்டில் ஈடுபட முயற்சித்வர்களை திடீரென காவல்துறையினர் தடுக்க முயன்றதால் பல்வேறு இடங்களில் மோதல் உருவாகும் சூழல் நிலவியது.
இந்த குழப்பமான சூழ்நிலை உருவாகதவாறு முன்ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தமிழக அரசு மெத்தனத்துடன் செயல்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு முன்கூட்டியே 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல் துறையின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும்.
அதை செய்யாமல் விட்டுவிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சித்தவர்கள் மீதும், கோவில்களில் காளைகளை வைத்து வழிபாடு நடத்தியவர்கள் மீதும் கண்மூடித்தனமாக போலீசார் தடியடி நடத்தியதாக தமிழகம் முழுவதும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கான சூழ்நிலை உருவாகதவாறு தடுக்காமல் இருந்த தமிழக அரசின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளமுடியாதது.
போலீசாரின் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையினை தமிழக அரசு வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications