போச்சு மொத்தமா போச்சு.. 14 தொகுதிகளை சண்டை போட்டு வாங்கி போண்டியான தேமுதிக!
சென்னை: பாஜகவிடம் அணத்தி தொணத்தி சண்டை போட்டு முறைத்து, விறைத்து பெற்ற 14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெல்ல முடியாமல் போயுள்ளது.
பெரும் மிதப்பில் இருந்து வந்த தேமுதிகவினருக்கு இந்த எதிர்பாராத முட்டைத் தோல்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை சத்தியமாக தேமுதிகவினர் எதிர்பார்க்கவில்லை.

சேலத்தில் மச்சானுக்கு வச்ச ஆப்பு
சேலம் தொகுதிதான் தேமுதிகவுக்கு கிடைத்த பெரும் ஆப்பாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியைப் பெறத்தான் எத்தனை சண்டை.. எத்தனை மோதல்.. அத்தனையும் இப்போது போண்டி. விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷுக்கு இங்கு அதிமுக ஆப்பு வைத்து விட்டது.

எல்லா இடத்திலும் மோசம்
எல்லா இடத்திலுமே தேமுதிக தோல்வியைத் தழுவுகிறது. சில இடங்களில் அவர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா என்பது கூட எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

இது வேண்டும்... அது வேண்டும்...
நாங்கதான் பெரிய கட்சி, எங்களுக்குத்தான் நிறைய சீட், அது வேண்டும், இது வேண்டும், இந்த தொகுதிகள்தான் தேவை.. இதெல்லாம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அடம் பிடித்து அநியாயம் செய்த தேமுதிகவுக்கு இப்போது அதிர்ச்சி நேரம்.

எங்குமே இல்லை
கேட்டு வாங்கிய 14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எங்குமே அது முன்னிலையில் இல்லை.

விஜயகாந்த் கேட்ட தொகுதிகளில்தான் மோசம்
விஜயகாந்த் வலியுறுத்திப் பெற்ற தொகுதிகளில்தான் தேமுதிக தோல்வியுறும் நிலை காணப்படுவது தேமுதிகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆட்டமான ஆட்டம்
கட்சி காலியாகி ரொம்ப நாளாகி விட்டது என்று பலரும் கூறியும் கூட அதை நம்பாமல் தனக்கு அத்தனை பலமும் அப்படியே இருக்கிறது என்று நாக்கை மடித்தும், கையை ஆட்டியும், கோபப்பட்டும் கூறி வந்த விஜயகாந்த்துக்கு, தேமுதிக கூடாரம் காலியாகி விட்டதை இந்தத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

அதீத நம்பிக்கை
பாஜகவை இவர்கள் படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் கண்ணில் வியர்க்கும். அப்படி ஒரு அழிச்சாட்டியம். விஜயகாந்த் மட்டுமல்லாமல் அவரது மனைவி, மச்சான் ஆகியோர்தான் கட்சியை நடத்தி வந்தவர்கள். அவர்கள் சொல்படிதான் விஜயகாந்த்தும் கேட்டு செயல்பட்டு வந்தார். இதெல்லாம் மக்களிடையே அவர்களது கட்சி குடும்பக் கட்சி, குடும்ப ஆதிக்கம் மிகுந்த கட்சி என்ற அவப் பெயரை ஏற்படுத்தி விட்டது.

பண்ருட்டியார் விலகல் -- முக்கிய தாக்கம்
கட்சியிலிருந்து பலர் வெளியேறிய போதும் கூட தேமுதிகவின் பிறப்புக்கு முக்கியக் காரணமாக, வழிகாட்டியாக அமைந்தவரான பண்ருட்டி ராமச்சந்திரனே கட்சியை விட்டுப் போனதுதான் தேமுதிக மீதான மக்களின் பார்வையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தன்னிச்சை.. அவசரக்குடுக்கை.. கோபம்..
தன்னிச்சையான முடிவுகள், அவசரக்குடுக்கைத்தனம், கோபாவேசம் ஆகிய விஜயகாந்த்தின் குணாதிசயங்கள்.. எல்லாமே தேமுதிகவின் பெரும் தோல்விக்க முக்கியக் காரணங்கள் என்று கூறலாம்.

அம்மா இல்லைன்னா.. சும்மா....!
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்ததால்தான் விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் இந்த ஏற்றம் கிடைத்தது என்பதை இந்த தேர்தல் மூலம் விஜயகாந்த்தும், தேமுதிகவுமே நிரூபித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications