அதிமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ
கடலூர்: தேமுதிக எம்.எல்.ஏ தமிழழகன் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் தமிழழகன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தனது காரில் அ.தி.மு.க. கட்சி கொடியை பறக்க விட்டுள்ளார். அ.தி.மு.க. கரை போட்ட வேட்டி கட்டி உள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தாலும் இவர் இதுவரை தே.மு.தி.க.வில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்படவில்லை. இந்த நிலையில் பெண்ணாடத்தில் உள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அந்த அரங்கத்துக்கு வந்த தமிழழகன் எம்.எல்.ஏ. நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பாளரிடம் அவர் மனுவை ஒப்படைத்தார். இதனைப் பார்த்த அதிமுகவினர் ஆச்சரியமடைந்தனர்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏவான தமிழழகன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications