ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி கொண்டுதான் வைகோ திமுகவை உடைத்தாரா? சந்திரகுமார் விளாசல்
சென்னை: தேமுதிகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சந்திரகுமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: பணத்தை பெற்றுக்கொண்டு யாருக்கோ, ஆதரவாக நாங்கள் செயல்படுவதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தேமுதிகவில் இருந்து வெளியேறினர். அப்போது யாரையாவது பேட்டியளிக்க அனுமதி தந்தீர்களா. நாங்கள் பேட்டியளித்ததும், அதற்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது என்பதற்காக, தேமுதிக நிர்வாகிகளை வைத்து பிரஸ் மீட் செய்ய சொல்கிறீர்கள். மாவட்ட செயலாளர்களை பேட்டியளிக்க அனுமதியளித்துள்ளீர்கள்.

இதுவரை எந்த நிர்வாகிகளையும் பேட்டியளிக்க தேமுதிக தலைமை அனுமதி தந்தது கிடையாது. அங்கு ஜனநாயகம் இல்லை. இப்போது உங்கள் மீது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டதால், பேட்டியளிக்க அனுமதியளித்துள்ளீர்கள்.
அதிமுக காலத்தில் எங்களுக்கு எத்தனையோ ஆசை காட்டினர். பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் நாங்கள் அப்போதே கட்சியை விட்டு விலகியிருப்போம். எனவே எங்களுக்கு பணத்தின் மீது ஆசை கிடையாது.
தேமுதிகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியன் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் கட்சி உறுப்பினர் பொறுப்பு, எம்.எல்.ஏ பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.
அதேநேரம் பிற 8 எம்.எல்.ஏக்களும் அதிமுகவுடன் தொடர்பு வைத்திருந்தனர். அவர்கள் பாக்கெட்டில் ஜெயலலிதா போட்டோ வைத்திருந்தனர். அதிமுக கரைவேட்டி கட்டி சட்டசபைக்குள் வந்தனர். ஆனால், அவர்களை கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆனால், நாங்கள் இப்போதும் கேப்டன் போட்டோவை பையில் வைத்துள்ளோம். எங்களை மட்டும் ஏன் நீக்கினீர்கள்?

1992ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறினாரே, அப்போது ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் திமுகவை உடைத்தேன் என்று வைகோ ஒப்புக்கொண்டாரா?. வைகோ அதை ஒப்புக்கொண்டால், என்மீதான குற்றச்சாட்டை நானும் ஒப்புக்கொள்கிறேன். வைகோ முதலில் அவரது கட்சி பிரச்சினையை பார்க்கட்டும்.
அவருக்கு ஒரு நியாயம், அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா? நான் தொடர்ந்து தேமுதிக கரைவேட்டி கட்டுவேன், கேப்டன் போட்டோவை பையில் வைத்திருப்பேன். இப்போதும் எனது தலைவர் விஜயகாந்த்தான்.
ஜெயலலிதாவிடம் ரூ.1500 கோடியை வைகோ வாங்கிக்கொண்டுதான், மக்கள் நல கூட்டணியை அதிமுகவின் பி-டீமாக உருவாக்கியுள்ளதாக பட்டிதொட்டியெல்லாம் பேச்சு வந்துவிட்டது. புரோக்கராக செயல்பட்டு பல கட்சியினருக்கும் பணத்தை பிரித்துக்கொடுத்து கூட்டணியை வைகோ அமைத்துள்ளதாக தகவல் வருகிறது. இதை வைகோ ஒப்புக்கொள்வாரா? இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications