பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக தோல்வியில் இருந்து மீண்டு எழும்: விஜயகாந்த்
காரைக்குடி: சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல் தே.மு.தி.க. தோல்வியில் இருந்து மீண்டு எழும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். காரைக்குடியில் தே.மு.தி.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில், பங்கேற்ற அவர் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசினார்.
சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான அணி படுதோல்வியை சந்தித்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த், போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை பறிகொடுத்தார். திருமாவளவன் தவிர தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா வேட்பாளர்களும் இந்த தோல்வி மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, தமாகா தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் இருந்த விஜயகாந்த், பிரேமலதா இன்று காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசினர். அப்போது விஜயகாந்த், தோல்வி நமக்கு புதிதில்லை. சாம்பலில் இருந்து உயிர்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல், தேமுதிக உயிர்தெழும் என்று கூறினார்.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு காரைக்குடியை ஏன் கொடுக்கவில்லை என நினைக்காதீர்கள். கொடுப்பேன். பத்திரிக்கைகள் விஜயகாந்த் பயப்பட்டு விட்டான் என்பார்கள். நான் பயப்படவில்லை. நீங்களும் பயப்படக்கூடாது. பீனிக்ஸ் பறவை நெருப்பில் எரிந்து சாம்பலாகி திரும்ப உயிர்த்தெழுந்து பறக்கும். அதுமாதிரிதான் நான். அதுமாதிரிதான் நீங்களும், என்றார் .
சட்டசபை தேர்தல் தோல்வியால் சோர்வடைந்திருந்த தொண்டர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரும் வகையில் பேசியுள்ளார் விஜயகாந்த்.