திமுக பரம யோக்கியனா? வைர விழா கருணாநிதிக்கு அல்ல.. அரசியல் ஆதாயத்திற்குதான்: பொன். ராதாகிருஷ்ணன்
வைர விழா கருணாநிதிக்காக நடத்தப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்: வைர விழா கருணாநிதிக்காக நடத்தப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். வைர விழா அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்
இதற்கான ஏற்பாடுகளிலும் திமுகவினர் படுஜோராக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார்.
முக்கியத்துவம் குறையும்
அப்போது தொழிற்சாலைகள் வேறு மாநிலத்துக்கு சென்றால் தமிழகத்துக்கு தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என அவர் கூறினார். பிறமாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்லும் நிலை நீடித்தால் சென்னைக்கான முக்கியத்துவம் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயத்துக்காக
மேலும் வைரவிழா கருணாநிதிக்காக நடத்தப்பவில்லை என்று அவர் கூறினார். அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே வைர விழா நடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பரம யோக்கியன்?
அனைத்து வேலைகளுக்கும் கமிஷன் வாங்கியது திமுகதான் என்றும் அவர் சாடினார். திமுக பரம யோக்கியன் போல் பேசுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
போகமாட்டோம்
தவறு செய்பவர்களை அழைத்து விழா நடத்தப்படுகிறது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நிச்சயமாக திமுக விழாவிற்கு செல்ல மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.