2016ல் திமுக, அதிமுகவை ஆட்சியமைக்க விடமாட்டேன்: விஜயகாந்த் திட்டவட்டம்
சென்னை: வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வர தேமுதிக அனுமதிக்காது என அக்கட்சியின் தலைவர் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கோப்பணம் பாளையத்தில் தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளர் சம்பத்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார். மாநில வக்கீல் அணி துணை செயலாளர் எஸ்.கே.வேல், மாவட்ட அவைத் தலைவர் விஜய் சரவணன், பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காசு கொடுத்து சேர்த்த கூட்டமல்ல...
அப்போது பேசிய அவர், "இங்கு கூடியிருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தை காசு கொடுத்து கூட்டியதாக காவல்துறையை சேர்ந்த ஒருவர் கூறினார். அதற்கு நான் அவரிடம் அப்படி கூட்டி வந்திருந்தால் ஆட்சியை பிடித்து இருப்போம் என்றேன்.
திமுக, அதிமுக ஆட்சிக்கு வரவிடமாட்டேன்...
வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வர தேமுதிக அனுமதிக்காது. எப்பாடு பட்டாவது அதனை நான் தடுப்பேன்.
திமுக தேடி வராதா?
திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று சொல்லி உள்ளார். நாங்கள் தான் தேடிப்போக வேண்டுமா? நீங்கள் தேடி வர மாட்டீர்களா? ஏன் நீங்கள் வாருங்களேன்.
நாமக்கல் என்றால்...
நாமக்கல் என்றால் ஆளுங்கட்சி மற்றும் திமுகவுக்கு நாமம் போட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அர்த்தம். வருகிற சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 6 தொகுதிகளிலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மணல் கொள்ளை...
கிருஷ்ணராயபுரம் தொகுதி வழியாக நான் வந்தேன். வரும் வழியில் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல் அள்ள அணிவகுத்து நின்றன. தென்கொரியா போன்ற நாடுகளில் இயற்கை வளத்தை அழித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு அரசாங்கமா நடக்கிறது?.
தட்டிக்கேட்டால் வழக்கு...
மணல் கொள்ளை, முட்டை கொள்முதலில் கொள்ளை உள்பட பல்வேறு ஊழல்கள் நடந்து வருகிறது. இதுபற்றி பேசினால் தர்மபுரியில் போட்டது போன்று வழக்கு போட்டு விடுவீர்கள். அதற்கு நான் பயப்படவில்லை. நான் என்ன கொலையா செய்தேன். பேசத்தானே செய்தேன்?.
கேவலம்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு விவகாரத்தில், மத்திய தொழில்பாதுகாப்பு படைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழக காவல்துறை மேல் நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் கேவலம் ஆகும்.
ஊழலை ஒழிக்க வேண்டும்...
காவல்துறையினர் யாருக்கும் பயப்படக்கூடாது. இன்றைக்கு ஆளும்கட்சியினர் ஆயிரம், 2 ஆயிரம் என ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பி கொண்டிருக்கின்றனர். பணத்தை வாங்கிக்கொண்டு மக்கள் திரும்பவும் அவர்களுக்கு ஓட்டுப்போட்டால் மீண்டும் ஊழல் பெருகும். எனவே பொதுமக்கள் நடைபெற உள்ள தேர்தலில் தேமுதிகவுக்கு முழு ஆதரவு அளித்து ஊழலை ஒழிக்க வேண்டும்" என இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.
நன்றியுரை...
இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் பழனிவேல், நடராஜன், விஜயன், மாதேஸ்வரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வைரமணி, ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, துணை செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் முத்துக்குமார் நன்றி கூறினார்.