ஆர்கே நகர் தேர்தல்: வேட்பாளரை தேடும் திமுக! சிம்லா முத்துச்சோழனை மீண்டும் நிறுத்த கடும் எதிர்ப்பு!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரைத் தேடும் நிலையில்தான் திமுக இருக்கிறது. மீண்டும் சிம்லா முத்துசோழனை வேட்பாளராக நிறுத்தவும் திமுகவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரைத் தேடும் நிலையில்தான் இருக்கிறோமே என்பது திமுக தொண்டர்களின் கவலை. இத்தொகுதியில் மீண்டும் சிம்லா முத்துச்சோழனை வேட்பாளராக நிறுத்த இப்போதே கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. இங்கு திமுகவுக்கான வலுவான தளமும் இல்லை.. வலிமையான முகமும் இல்லை.
1989-91; 1996-2001ஆம் ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக இத்தொகுதியில் திமுகவின் எஸ்.பி. சற்குணம் வெற்றி பெற்றார். பொதுவாக அதிமுக வாக்கு வங்கி நிறைந்தது ஆர்.கே.நகர் தொகுதி.
ஆளைத் தேடும் திமுக
இதனால்தான் கடந்த தேர்தல்களில் ஜெயலலிதா என்ற தலைவரை எதிர்த்து போட்டியிடக் கூட ஆளைத் தேடும் நிலையில் திமுக இருந்தது. வேறுவழியே இல்லாமல் திமுகவினருக்கு சற்றும் தொடர்பே இல்லாதவரான, எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் என்ற ஒற்றை காரணத்துக்காகவே சிம்லா முத்துசோழனை களமிறக்கி தோல்வியை உறுதி செய்து கொண்டது திமுக.
திமுக நிலைமை
இப்போதும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் நிலைமை பரிதாபம்தான்.. துளியளவும் இதில் முன்னேற்றமே இல்லை.
நாலாபுறமும் சிதறும் வாக்குகள்
ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. அதிமுக வாக்குகள் நாலாபுறமும் சிதறும் நிலை உள்ளது.
வேட்பாளரே இல்லை
இதனால் வலிமையான ஒரு வேட்பாளரை திமுக நிறுத்தினால் மட்டுமே வெல்லக் கூடிய சாத்தியம் இருக்கிறது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் அப்படியான ஒரு வலிமையான வேட்பாளரே திமுகவுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
சிம்லா முத்துசோழனுக்கு கடும் எதிர்ப்பு
ஆர்.கே.நகரில் மீண்டும் சிம்லா முத்துசோழனை நிறுத்தினால் திமுகவின் தோல்வி உறுதிதான் என்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள். திமுக நிர்வாகிகளே வெளிப்படையாக சிம்லா முத்துச் சோழனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் கிடக்கிறது திமுக.