பிளானையே மாற்றிய திமுக கூட்டணி.. ஆளுநர் மாளிகைமுன் ஆர்ப்பாட்டம் இல்ல! சென்னையில் கண்டன பொதுக்கூட்டம்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்களை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சென்னை சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு நாகரீகமாக ஒப்புதல் இல்லை என்பதே பொருள் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
"ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் - அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது இறுதியிலும் உறுதியான நிலைப்பாடு ஆகும். ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியமில்லாத பதவியாகும்.
தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்து அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது - சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற 12.4.2023 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது. மக்களாட்சியின் மாண்பைக் காக்க நினைக்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு வாரீர் என வேண்டுகிறோம்." என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இந்த நிலையில் தற்போது அந்த ஆர்ப்பாட்டத்தை கண்டன பொதுக்கூட்டமாக திமுக கூட்டணி கட்சிகள் மாற்றி இருக்கின்றன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேரடி திடலில் கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரியும், ஸ்டெர்லைட் போராட்ட குறித்த பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவிக்காததை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications