பாரதிய ஜனதாவுடன் கூட்டணியா? கருணாநிதி 'நழுவல்' பதில்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதற்கு வெளிப்படையாக திமுகவின் மனநிலையை தெரிவிக்க முடியாது என்று நழுவலான பதிலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நாடாளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஜே.பி.சி. அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்களே, அந்த அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நாடாளுமன்றத்தில் எங்கள் கழக உறுப்பினர்கள், அந்த அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வெளிநடப்பும் செய்திருக்கிறார்கள் அல்லவா? அது தான் என்னுடைய கருத்தும் ஆகும்.

கே: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
ப: பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே இன்னும் தொடங்கவில்லை. எனவே யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை.
கே: தி.மு.கழகம் பா.ஜ.க. வோடு கூட்டுச் சேரலாம் என்ற மன நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
ப: தி.மு.கழகத்தின் மன நிலை என்ன என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்ல முடியாது.
கே: அன்னா ஹசாரே மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறாரே? அந்தப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
ப: நம்பிக்கையும் இருக்கிறது; ஆதங்கமும் இருக்கிறது.
கே: தி.மு. கழகப் பொதுக் குழுவின் அஜெண்டா என்ன? வெறும் நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தானா?
ப: நிலைமைக்கு ஏற்ப.
இவ்வாறு கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications