திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட்... தொண்டர்கள் ஆறுதல்
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. தொகுதி ஒதுக்கீட்டை ஸ்டாலின் உறுதிசெய்தார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கடலூர், விழுப்புரம் உள்பட மாநிலம் முழுவதும் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் அவசர கூட்டத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டினார். சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் இன்று காலை தொடங்குவதாக இருந்தது.
திருவள்ளூர் தொகுதி
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், விடுதலை சிறுத்தை கட்சிக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறினார்.
ஏற்கனவே, விடுதலை சிறுத்தைக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொதித்த தொண்டர்கள்
முன்னதாக, வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று முழக்கமிட்டபடியே அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
வன்னியரசு மீது தாக்குதல்
தொண்டர்களை கட்சியின் முக்கிய நிர்வாகியான வன்னியரசு தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரம் அடைந்த தொண்டர்கள், வன்னியரசை தாக்கினர்.
அறிவாலயம் விரைந்த திருமா
தகவல் அறிந்து திருமாவளவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர்களை சமாதானப்படுத்திய திருமாவளவன், பின்னர் காரில் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 தொகுதி ஒதுக்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார். தி.மு.க.வுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
2 வது ஒதுக்கியது ஏன்?
ஒரு சீட் ஒதுக்கியதற்கு கொதிப்படைந்த தொண்டர்கள் தனித்து போட்டியிட்டு வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலும், கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிச் சென்று விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் கேட்டு திருவள்ளூர் தொகுதியாவது கிடைத்ததே என்று தொண்டர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications