கருணாநிதி வீடு திரும்பும் வரை காத்திருப்போம்.. திமுக தொண்டர்கள் உறுதி
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி எங்களது உயிரில் கலந்த உணர்வு. அதை இழக்க நாங்கள் தயாராக இல்லை. அவர் நலமுடன் வீடு திரும்பும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று திமுக தொண்டர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே காவேரி மருத்துவமனைக்கு வெளியே திமுகவினர் பெருமளவில் திரண்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் காவல்துறையினரும், திமுக தலைவர்களும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு பகலாக, மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். கருணாநிதி நலம் பெற்றுத் திரும்ப வரக் கோரி பல்வேறு வழிபாடுகளிலும் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் நலம் பெற வேண்டும்
காவேரி மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தொண்டர்கள் கூறுகையில், தலைவர் கலைஞர் விரைவில் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

கருணாநிதி கிங் மேக்கர்
பல பிரதமர்களை, பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர். மக்களுக்காக உழைத்த உத்தம தலைவர் அவர். அவருக்காக பட்டினி கிடப்பது, தூங்காமல் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

கருணாநிதிக்காக அழுது கொண்டுள்ளோம்
பல கோடி மக்களின் இதயத்தில் இருக்கும் கருணாநிதிக்காக அழுது கொண்டிருக்கிறோம். எங்களது உயிரை எடுத்துக் கொண்டு அவரை திருப்பித் தர கடவுளை வேண்டுகிறோம்.

பெண்களுக்காக நிறைய செய்தவர்
பெண் தொண்டர்கள் சிலர் கண்ணீர் மல்கக் கூறுகையில், பெரியார் அண்ணாவுக்குப் பிறகு பெண்களுக்காக குரல் கொடுத்தவர், அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி மட்டுமே. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற மிகப் பெரிய நிவாரணத்தை அளித்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. பெண்களுக்காக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி.

உயிரில் கலந்த உணர்வு
கருணாநிதி எங்களது உயிரில் கலந்த உணர்வு. அதை இழக்க நாங்கள் தயாராக இல்லை. அவர் நலமுடன் திரும்பி வருவார். அவர் திரும்பி வரும் வரை நாங்கள் காத்திருப்போம். இங்கேயே காத்திருப்போம், போக மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications