ஆர்.கே.நகரில் ஜெயலலலிதாவுக்கு கிடைத்த 50,000 தி.மு.க. ஓட்டுகள்... அதிர்ச்சியில் அறிவாலயம்!!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான தி.மு.க,, தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியினரின் வாக்குகளையும் அப்படியே அள்ளியதால்தான் முதல்வர் ஜெயலலிதாவால் 1.60 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்துள்ளது. இது திமுக தலைமையை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்தலில் 88.43% வாக்குகளை அதாவது 1.60 லட்சம் வாக்குகளைப் பெற்று ஜெயலலிதா அபார சாதனை படைத்துள்ளார்.

அதிமுக வாக்குகள் இதுதான்..
கடந்த 3 சட்டசபை தேர்தல்களிலும் அண்ணா தி.மு.க.தான் இத்தொகுதியில் தொடர்ந்து வென்றுள்ளது. ஆனால் இத்தனை வாக்குகளைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் சேகர்பாபு 74,888 ; 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் சேகர்பாபு 84,462 ; 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் பி.வெற்றிவேல் 83,777 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆக இத்தொகுதியில் அண்ணா திமுகவின் மிக அதிகபட்சமான வாக்குகள் என்பது சுமார் 85ஆயிரம் என்பதாகத்தான் இருந்து வருகிறது.

திமுக வாக்கும் இதுதான்..
திமுகவைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தல்களில் 47,556 (2001), 52,522 (2011) என்கிற வகையில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் அளவுக்கு பெற்று வந்துள்ளது.

அப்புறம் எப்படி 1.60 லட்சம் ஓட்டு?
இம்முறை திமுக தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த முடிவை திமுக தொண்டர்கள் அப்படியே கடைபிடித்திருந்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமலோ அல்லது ஜெயலலிதாவுக்கு போகோமாலோ இருந்திருக்கும். ஆனால் வழக்கமான அதிமுகவின் ஓட்டை விட சுமார் 80 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக ஜெயலலிதா பெற்றுள்ளதைப் பார்க்கும் போது பெரும்பாலான திமுகவினர் ஜெயலலிதாவுக்கே வாக்களித்திருப்பதாகவே தெரிகிறது.
இதேபோல் இத்தொகுதியில் காங்கிரஸ் வாக்குகளும் கணிசமாக இருக்கிறது; தேமுதிகவுக்கும் வாக்குகள் இருக்கிறது..இந்த கட்சிகளின் வாக்குகளும் கூட ஜெயலலிதாவுக்கு சென்றிருப்பதால்தான் அவர் 1.60 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்திருக்கிறது.

அதிர்ச்சியில் திமுக
கட்சித் தலைமையின் உத்தரவை மீறி பெருவாரியான திமுகவினர் ஓட்டுகள் ஜெயலலிதாவுக்கு போயிருப்பது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் திமுக ஆட்சிக் கால இடைத்தேர்தல்களில் அதிமுகவினர் வாக்குகளை நாங்களும் 'அறுவடை' செய்தோம் என்ற சமாதான விளக்கங்களும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த நிலைமை சட்டசபை தேர்தலிலும் நீடிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் முக்கிய கவலையுமாக இருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்..












Click it and Unblock the Notifications