வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சியின் அவலத்தைச் சொல்லுங்கள்... திமுக மகளிருக்கு உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணிச் செயலாளர் கீதா ஜீவன் கூறுகையில், வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சியின் அவலத்தை திமுக மகளிர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில மகளிரணி துணை செயலாளர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கருணாநிதிக்கு நன்றி
அதனைத்தொடர்ந்து, வரும் 2016ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் நேரத்தில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராமங்கள் தோறும் திண்ணைப்பிரச்சாரம் மேற்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வீடு வீடாகப் போங்க
முன்னதாக மாநில மகளிரணி துணை செயலாளர் கீதாஜீவன் பேசியதாவது, தமிழகத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சின் அவலங்களை பெண்களான நாம் தான் வீடுவீடாக சென்று சொல்லவேண்டும்.

தெருத் தெருவா போங்க
அரசின் திட்டங்கள் தகுதியில்லாதவர்களுக்கும், அதாவது அதிகமாக லஞ்சம் கொடுப்பவர்களுக்குமே கிடைக்கிறது. மதுவினால் தமிழகம் சீரழிந்து வருகிறது. நமது தலைவர் கலைஞர் தலைமையில் 2016ல் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்காகத்தான் இருக்கும் என்பதை நாம் தெருத்தெருவாக சென்று எடுத்துச்சொல்லவேண்டும்.

வீடு தவறாமல் எடுத்துச் சொல்லி
தளபதியின் நமக்குநாமே மக்கள் சந்திப்பு மூலமாக திமுகவின் வாக்கு வங்கி 10சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆட்சியின் அவலங்களை நாம் வீடு தவறாமல் எடுத்துச்சொல்லி மக்களுக்கு புரிய வைத்திடவேண்டும்.

ஒன்றாக இணைந்து பணியாற்றுக
நாம் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றிடவேண்டும் என்றார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications