ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வேன்.. ஒன்இந்தியாவிடம் மனம் திறந்த திமுக மருது கணேஷ்
ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷ், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் என்னென்ன செய்யவிருக்கிறார் என ஒன்இந்தியாவிடம் மனம் திறந்து பேட்டி அளித்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அதே தொகுதியைச் சேர்ந்த மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிக பணம் புரளும் இந்தத் தேர்தலில் அதிமுக அம்மாவின் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மாவின் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜகவின் கங்கை அமரன் மற்றும் சிபிஎம்மின் லோகநாதன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதே தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா சோழனுக்குத்தான் சீட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், மண்ணின் மைந்தன் என்ற அடைமொழியோடு, அறிவாலயம் மருது கணேஷை வேட்பாளராக அறிவித்தது. வெற்றியை தனதாக்கிவிட வேண்டும் என்று கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மருது கணேஷ் ஒன்இந்தியாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:
குடிநீர்
இந்தத் தொகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் நலப் பணிகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. சாலைகளில் கழிவு நீர் ஓடுகிறது.
சுகாதாரம்
ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.
மழைநீர் கால்வாய்
மழைநீர் கால்வாய்கள் தூர் வாரப்படாததால் மழையின் போது சாலைகளில் மழைநீர் தேங்கி சாலைகளில் ஓடுகிறது. பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படாததால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் அவலம் நடக்கிறது. இப்படி பலப் பிரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
தீர்வு
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வாக திமுகவையும் செயல் தலைவர் ஸ்டாலினையும் மக்கள் பார்க்கிறார்கள். வெற்றி பெற்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். மேலும் மு.க. ஸ்டாலின் அடுத்த முதல்வராக வருவதற்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிப் பரிசாக இருக்கும் என்று மருதுகணேஷ் கூறியுள்ளார்.