தேர்தல் நிதியை சுருட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள்- கருணாநிதி, ஸ்டாலினிடம் வேட்பாளர்கள் குமுறல்
சென்னை: தேர்தல் நிதியை சுருட்டிக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம் அக்கட்சியின் வேட்பாளர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் முடிவுகளை பொறுத்து மாவட்ட செயலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலை ஸ்டாலின் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். ஒருபக்கம் ஆளுங்கட்சியின் அதிகாரம், மறுபக்கம் பாஜ தலைமையில் அமைந்த வானவில் கூட்டணி என, பிற கட்சிகளின் சவால்கள். மற்றொருபக்கம் தென்தமிழக திமுகவின் முக்கிய புள்ளியும் தனது சகோதரருமான அழகிரியால் கட்சியின் செல்வாக்கு சரிவு என இருபெரும் சவால்களை எதிர்கொள்ள முழுவீச்சி்ல் ஸ்டாலின் களமாட வேண்டியிருந்தது.

களமிறங்கிய கருணாநிதி
எனவேதான் கோடை வெயிலிலும் சுமார் 8500 கிலோமீட்டர் தூரத்தை வேனில் சென்று கடந்து பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருதிதான், 90 வயதான கருணாநிதியும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

நமக்கென்ன வந்தது
ஆனால் சில மாவட்டச் செயலாளர்களோ நமக்கென்ன வந்தது என்ற ரீதியில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக தெரிகிறது. சிலர் எதிர்கட்சியினருக்கு உதவிகரமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகார் பட்டியல்
இதனால் அதிருப்தியடைந்த திமுக வேட்பாளர்கள் சிலர், சென்னைக்கு வந்து கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்தித்து தங்களுக்கு ஒத்துழைக்காத கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார் பட்டியல் வாசித்துள்ளனர்.
புகாரை மனுவாக எழுதியும் கொடுத்துள்ளனர். தேர்தல் களைப்பு நீங்க ஸ்டாலின் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே அவர் புறப்படும் முன்பாக கருணாநிதியுடன் சேர்த்து ஸ்டாலினையும் சந்திக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் சென்னைக்கு அணிவகுத்ததாக கூறப்படுகிறது.

நிதியும் போச்சு
இந்த புகாரில், தேர்தல் பணிக்காக அளித்த நிதியையும் மாநில செயலாளர்கள் சிலர் லபக் செய்துவிட்டனர் என்பதுதான் ஹைலைட். இதனால் ஆத்திரத்திலுள்ள திமுக தலைமை, தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
வேட்பாளர்களின் முறையீடு காரணமாகமே நேற்று அழகிரி ஆதரவாளர்களில் மேலும் 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications