மநகூ தலைவர்களுக்கு மதிப்பு கொடுத்த திருமா- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை
திமுக இன்று நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக திமுக இன்று நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி கட்சியினரின் கருத்துக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்துள்ளார் திருமாவளவன்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் போராட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்பது அரசியல் கட்சியினரின் கருத்தாகும்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது திருமாவளவனின் வலியுறுத்தல். அதே நேரத்தில் ஆளும் கட்சி அனைத்துக்கட்சி கூட்ட வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக வலியுறுத்தியது. ஆளும் கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டால் நாங்கள் கூட்டுவோம் என்று கூறினார் ஸ்டாலின். அவர் சொன்னது போலவே அக்டோபர் 25ம் தேதி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அழைப்பு விடுத்தார்.
அதே நேரத்தில் இந்த கூட்டதில் அதிமுக, பாஜக பங்கேற்காது என்று உடனடியாக அந்த கட்சிகள் அறிவித்தன. அதேபோல மக்கள் நலக் கூட்டணி கலந்து கொள்ளாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். இந்த அறிவிப்பு அக்கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு அல்ல. வைகோவின் அறிவிப்பு தன்னிச்சையானது. அதனால் தன் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக கூறினார் திருமாவளவன். தன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை செய்தார்.
அம்பேத்கர் திடலில் நடந்த அக்கூட்டத்தில் திமுக-வின் அழைப்புக்கு விசிக பங்கேற்க வேண்டும் என்பது கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவு. மேலும், வைகோ தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி அரசியலில் நம்மையும் இழுக்கிறார். இது ஒரு கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. காவிரி பொது விவகாரம் குறித்து நாம்தான் முதன்முதலாக திமுகவுக்கு கோரிக்கை வைத்தோம் என்றெல்லாம் பேசினார்.
நிர்வாகிகள் அனைவரின் கருத்தையும் கேட்ட திருமாவளவன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிப்போம் என்று கூறி விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கிருந்தவர்கள் திருமாவளவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்கள்.
திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முடிவு. கலந்து கொள்ளக்கூடாது என்பது மக்கள் நலக் கூட்டணியின் முடிவு. இப்போது மக்கள் நலக் கூட்டணியின் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கும் திருமாவளவன், திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளாது என்று அறிவித்துள்ளார். மொத்தத்தில் மக்கள் நலக்கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்கள் கூறிய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கூட்டணி உடையாமல் பார்த்துக்கொண்டார் திருமாவளவன்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி கூறி கடிதம் எழுதியுள்ள திருமாவளவன், விசிக இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மக்கள் நலக்கூட்டணியில் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொண்டுள்ளார் திருமாவளவன்.