ராஜினாமா வேண்டாம்… மாவட்டச் செயலாளர்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை: தோல்விக்கு பொறுப்பேற்று யாரும் ராஜினாமா செய்யத் தேவையில்லை. ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் புதுவை உள்பட 35 தொகுதிகளிலும் போட்டி யிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் திமுக படுதோல்வி அடைந்துள்ளது.

ஸ்டாலின்.....
தோல்விக்கான பொறுப்பு முழுவதும் ஸ்டாலின் மீது விழுந்துள்ளது. இதனால், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் முன்வந்தார். அதை கருணாநிதி ஏற்கவில்லை. தொண்டர்களும் வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால், தனது முடிவை ஸ்டாலின் கைவிட்டார்.

சென்னை வந்த மா.செக்கள்
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் கருணா நிதியை சந்திக்க திங்கள்கிழமை சென்னை வந்தனர். மாவட்டச் செயலாளர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராணிப்பேட்டை காந்தி, ஏ.கே.எஸ்.விஜயன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி, என்.கே.கே.பி. ராஜா, வெள்ளக்கோவில் சாமிநாதன், செங்குட்டுவன், பெரியகருப்பன், தூத்துக்குடி பெரியசாமி, ஐ.பெரியசாமி மற்றும் பெரியண்ணன் அரசு உள்ளிட்டோர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா
பின்னர், மு.க.ஸ்டாலினை அவரது தேனாம்பேட்டை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஸ்டாலினிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தையும் தர வேண்டும் என்று சில மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சில மாவட்டச் செயலாளர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஒற்றுமையாக செயல்படுங்கள்
இந்தத் தகவல் தெரிந்ததும், மாவட்டச் செயலாளர்களை அழைத்து, ‘யாரும் ராஜினாமா செய்யத் தேவையில்லை. கோஷ்டிப்பூசல் எதுவும் இல்லாமல் கட்சியை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்' என்று கருணாநிதி அறிவுரை கூறியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications