தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் விவகாரம்: தி.மு.க., காங். இன்றும் வெளிநடப்பு!
சென்னை: சட்டசபையில் தே.மு.தி.க.வினர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு பேச அனுமதிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தே.மு.தி.க.பிரச்சினை பற்றி பேச தொடங்கினார். உடனே சபாநாயகர் இதற்கு அனுமதி இல்லை உட்காருங்கள் என்றார்.

ஆனால் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நின்றபடியே பேச அனுமதி கேட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினை பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இது போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரும் இதே கருத்து குறித்து பேச அனுமதி கேட்டனர். அவர்களுக்கும் அனுமதி கிடைக்காததால் இருவரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தே.மு.தி.க.வை இந்த கூட்டத் தொடர்முழுவதும் சஸ்பென்ட் செய்து இருக்கிறார்கள். இதனால் அடுத்து வரும் பட்ஜெட் தொடரிலும் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
ஆகவே தே.மு.தி.க. மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைப்பதற்காக அனுமதி கேட்டேன். ஆனால் அது குறித்து பேச தொடங்கியதுமே அது சபை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார்.
தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது பற்றி பேச அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தோம். கடந்த ஆட்சியின் போது இது போன்ற சம்பவங்களில் எதிர்கட்சிக்களின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இப்போதும் அது போன்ற கோரிக்கைத் தான் நாங்கள் வைக்க முன்வந்தோம். ஆனால் ஏற்கவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
எதிர்க்கட்சி இல்லாத சட்டசபை
இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறுகையில், தே.மு.தி.க. பிரதான எதிர்கட்சி. அந்த கட்சி இல்லாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பது சரியில்லை. எனவே அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக எழுந்து நின்றேன். சபாநாயகர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications