மாட்டுத் தொல்லைப் பற்றிப் பேசக் கூடாதா.... மேயரைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வாக்கவுட்
சென்னை: சென்னையில் மாடுகள் நடமாட்டத்தால் ஏற்படும் தொல்லை குறித்துப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மேயர் சைதை துரைசாமி தலைமையில் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் சீனிவாசன், ஆவின் அருள் ஆகியோர் தங்கள் வார்டுகளில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. மாடுகளை பிடிக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டனர்.
அதற்கு சைதை துரைசாமி பதிலளிக்கையில், மாட்டுப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது பற்றி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறோம். எனவே மாடுகள் தொல்லை குறித்து யாரும் பேச வேண்டாம்.
நாய்த் தொல்லைதான் ஜாஸ்தி...
இதைவிட தெரு நாய்கள் தொல்லைதான் அதிகமாக இருக்கிறது. வீதிகளில் நடக்க முடியவில்லை. மாணவர்கள், குழந்தைகள், வயதானவர்களை கடித்து விடுகிறது. இது போன்ற புகார்கள் மாநகராட்சி தகவல் மையத்துக்கு அதிகம் வருகின்றன. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.
தெரு நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட்டு விடுகிறோம். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் புளுகிராஸ் அமைப்பும் வலியுறுத்துகிறது. சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மாநகராட்சி இதுபோன்று செய்து வருகிறது. ஆனால் பொது மக்கள் மாநகராட்சி நாய்களை திரும்பவும் கொண்டு விடுவதை தவறாக நினைக்கிறாக்கள். எடுக்கும் நடவடிக்கை பயன் தராமல் போவதற்கு நீதிமன்ற உத்தரவு தான் காரணம் என்றார்.
அப்போது திமுக கொறடா வாசு தனது வார்டில் உள்ள மாடுகள் பிரச்சினை குறித்து பேச முயன்றார். மேயர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே மற்ற திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று, மாடு பிரச்சினை குறித்து பேச அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் அனைவரும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications