ஜெ. ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே திமுக தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை: கனிமொழி
சென்னை: அதிமுக ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அத்தகைய பெண்களுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் எழும்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த அறிக்கையாக வெளியாகும். அதில் பெண்களுக்கு என பல நல்ல திட்டங்களை வைத்துள்ளார் கருணாநிதி. அறிக்கை வெளியானதும் அதை நீங்கள் படித்துவிட்டு பிற பெண்களிடம் தெரிவிக்க வேண்டும்.
திமுக
தமிழக மக்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே. பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புபவர் தலைவர் கருணாநிதி.
ஜெயலலிதா
அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. செய்வீர்களா செய்வீர்களா என்று பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா மக்களை பார்த்து கேட்டார். செய்வோம் என்று கூறி வாக்களித்த மக்கள் தான் படாதபாடு பட்டுவிட்டனர்.
மிக்சி
அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் பழுதாகிவிட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி தற்போதும் நன்றாக வேலை செய்கிறது. திமுக ஆட்சியில் நல்ல பொருட்களை அளித்தோம். ஆனால் அதிமுக ஆட்சியில் ஏதோ கடமைக்காக பொருட்களை வேண்டா வெறுப்பாக அளித்துள்ளார்கள்.
டாஸ்மாக்
தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது. டாஸ்மாக்கால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. மதுவை ஒழிப்பேன் என்று கருணாநிதி தெரிவித்ததை நீங்கள் அனைவரிடமும் கூற வேண்டும். அதிமுக ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்.
அதிமுக
வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு பெண் கூட வாக்களிக்காத நிலையை உருவாக்கிட வேண்டும். வளர்ச்சி மற்றும் மலர்ச்சியை ஏற்படுத்த உதயசூரியனால் தான் முடியும். கருணாநிதி, ஸ்டாலினால் மட்டுமே முடியும்.