விவசாயிகளுக்கான முழு அடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி- ஸ்டாலின் பெருமிதம்!
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் 200 சதவீதம் வெற்றி கண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது.
திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

65,000 கடைகள் மூடல்
திமுக மற்றும் அனைத்துக்கட்சியினர் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்தாலும, தங்களது எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து எழுச்சியோடு போராடி வருகின்றனர். போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் 65 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.

200% வெற்றி
தமிழகம் முழுவதும் பலர் எழுச்சியோடு போராடி வரும் முழு அடைப்பு போராட்டம் 100க்கு 100 என்பதை விட 200க்கு 200 வெற்றி பெற்றுள்ளது. வங்கிக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது.

முன்னுதாரணம் இருக்கிறது
வி.பி.சிங் பிரதமராக இருந்த சமயத்தில் விவசாயிகள் கடன் 10 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசை நிர்வகிக்கும் திறமையில்லை. மக்களுக்காக போராடாமல் பதவிக்காக அதிமுகவினர் அடித்துக் கொள்கின்றனர்.

அடுத்த கட்ட போராட்டம்
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிடில் அடுத்த கட்டமாக பொதுமக்களை இணைத்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications