மேயர் தேர்தல்... ஆளுங்கட்சியை எதிர்க்க உதயநிதியே சரியான நபர்...நிர்வாகிகள் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை திமுகவில் வலுத்து வருகிறது.
ஆளுங்கட்சி அசுரபலத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் என்பதால் அவர்களை எதிர்கொள்ள உதயநிதியே சரியான நபர் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்காக பிரபாகர் ராஜா, சிற்றரசு, சிம்லா முத்துச்சோழன் உள்ளிட்ட பலர் விருப்பமனு அளித்து பணம் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Exclusive: ''புகழேந்தி பணத்தை எடுத்துட்டு ஓடிடுவாரு...'' அமமுக ரெங்கசாமி பாய்ச்சல்
கவுரவப் பிரச்சனை
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலை திமுகவும், அதிமுகவும், கவுரவப் பிரச்சனையாக கருதுகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது காலடி படாத இடங்களே சென்னையில் கிடையாது எனக் கூறலாம். அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அதிகாலையிலேயே ஆய்வு செய்ய சென்றுவிடுவார். அந்தப் பணிகள் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கை கொடுத்து உதவி, தலைநகர் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற செய்தது.
வேட்பாளர் தேர்வு
இந்நிலையில், சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைக்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தொடர்ந்து ஸ்டாலினை வலியுறுத்தி வருகிறார். மேலும், மாவட்டச் செயலாளர்கள் சேகர்பாபு, சுதர்சனம் ஆகியோரும் இதே கருத்தை ஸ்டாலினை வலியுறுத்துகிறார்கள்.
சரியான நபர்
உதயநிதி ஸ்டாலின் மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் எனக் கூறி விருப்பமனு அளித்து பணம் செலுத்திய சிம்லா முத்துச்சோழனிடம் இது தொடர்பாக பேசிய போது, ஆளுங்கட்சியை முழு பலத்துடன் எதிர்க்க கூடிய வல்லமை உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் தான் உண்டு, இந்தத் தேர்தலில் பல அராஜகங்கள் நடக்ககூடும் என்பதால் அவர் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்பது தனது கருத்து எனத் தெரிவித்தார்.
நிர்வாகிகள் ஆர்வம்
இதனிடையே திமுக சார்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிட விருப்பமனு அளிப்பதற்கு நாளையே கடைசி நாளாகும். அதனால் நாளைய தினம் தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட அலுவலகங்களில் விருப்பமனு அளிப்போர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.