கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை- 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு: கருணாநிதி
சென்னை: லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: தி.மு. கழகக் கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருக்கிறதா?
பதில்: இனி புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரிய வில்லை.
கேள்வி: வேட்பாளர்கள் நேர் காணல் முடிந்து விட்டது. எப்போது வேட்பாளர்களை அறிவிக்கப்போகிறீர்கள்?
பதில்: அதற்காக உள்ள குழுவினர் அமர்ந்து ஆலோசித்து, விவாதித்து, எந்தெந்த வேட்பாளர், எந்தெந்த தொகுதிக்கு என்று பிறகு அறிவிப்போம்.
செய்தியாளர்: கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பதை எப்போது முடிவு செய்வீர்கள்?
பதில்: இன்னும் இரண்டு நாட்களில்!
கேள்வி: அ.தி.மு.க. வில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கட்சியிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
பதில்: வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அதைப் பார்த்தாலே உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.
கேள்வி: உங்களுடைய தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் என்று சொல்லப்படுகிறதே, எப்படி விஷயங்கள் அதிலே இடம் பெறும்?
பதில்: இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப் படும். படித்துப் பார்த்தால் புரியும்.
கேள்வி: தேர்தல் அறிக்கையில் பிரதான விஷயமாக எது இடம் பெறும்?
பதில்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அதைப் படித்துப் பார்த்தால் நீங்களே சொல்வீர்கள்
கேள்வி: காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, அலைக்கற்றை விவகாரத்தை முன்னிறுத்திப் பேசியிருக்கிறார்களே?
பதில்: பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கினை அவர்கள் ஒருவேளை மறந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.