அனிதா தற்கொலையில் அவதூறு: கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்க முன்னாள் எம்.எல்.ஏ.சிவசங்கர் நோட்டீஸ்!
அனிதா மரணத்தில் தம்மை தொடர்புபடுத்தி பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரியலூர்: அனிதா தற்கொலையில் தம்மை தொடர்புபடுத்தி பேசிவரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மருத்துவ இடம் கிடைக்காவிட்டால் விவசாயம் படிப்பேன் என்று சொன்ன மாணவி அனிதாவின் மரணம் தற்கொலையா அல்லது அரசியல் காரணங்களுக்காக தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்றும் கிருஷ்ணசாமி தொடர்ந்து கேட்டு வருகிறார்.
மேலும் அனிதா மரணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திரபாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் அனிதாவின் மரணத்துடன் தம்மை தொடர்புபடுத்தி பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று சிவசங்கர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் தம்மை பற்றி அவதூறு பேசியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் சிவசங்கர் கிருஷ்ணசாமிக்கு அளித்துள்ள நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். மாணவி அனிதா அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதை முதன் முதலில் மீடியாக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சிவசங்கர். மேலும் அனிதா நீதி கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடவும் ஊக்கமளித்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.