ஆர்.கே நகரில் சூரியன் பிரகாசமாக உதிக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை
ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க உள்ள இடைதேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேட்பாளரை தலைமைக் கழகம் தேர்ந்தெடுக்கும் என திமுக செயல் தலைவர் கூறினார்.
சென்னை: ஆர்கே நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என திமுக செயல் தலைவர் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடபெறும் போராட்டத்தில் பங்குகொள்வதற்காக ராமேஸ்வரம் செல்லும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், ஆர்கே நகர் வெற்றி வாய்ப்புக் குறித்து பேட்டி அளித்தார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஆர்கே நகர் இடைதேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டக் கேள்விக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், ஆர்கே நகர் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், திமுக வேட்பாளர் யார் என்பதை இன்றிலிருந்து 13 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை பரிசீலித்து, வேட்பாளர் யார் என தலைமைக் கழகம் அறிவிக்கும் என கூறினார்.
மேலும் சென்னை மற்றும் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டப்பாடு குறித்து கேட்டதற்கு, சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அம்மையார் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பிருந்தே இந்த நிலை தொடர்கிறது.ஆனால், தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை குறித்து, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாக இல்லை எனக் கூறினார்.
மீனவர் போராட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு, மீனவர் பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து திமுகதான் குரல் கொடுத்து வருகிறது. ஏற்கனவே எங்கள் துணைப் பொது செயலாளர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதல் கூறிவந்திருக்கிறார். இப்போது செயல்தலைவர் என்ற முறையில் நானும் அம்மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் செல்கிறேன் என தெரிவித்தார்.
ஆந்திர மாநில காவல்துறை, 187 தமிழர்களை செம்மரம் கடத்தியதாகக் கூறி கைது செய்து, கொடுமை செய்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என கூறினோம். இப்போதும் அதையே தான் வலியுறுத்துகிறோம் என்றார்.