ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவை திமுக கேட்கவில்லை: திருமா பேட்டி
ஈரோடு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவை திமுக கேட்கவில்லை என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொளத்தூர் செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுகொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து பலமாதங்கள் ஆகியும் தமிழக அரசு அவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை.

நான் பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி நிவாரண உதவி வழங்க முயற்சித்தேன். காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என நான் அங்கு செல்ல அனுமதி தரவில்லை. இதிலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தமது சாதி அரசியலை செய்திருக்கிறது.
திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகனை ஊரைவிட்டே ஓட வேண்டும் என மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது ஜனநாயக விரோதம் ஆகும். மோடி பிரதமரான பின்னர் இத்தகைய போக்கு தலைதூக்கி உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இது சமூக நல்லிணக்கத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும்''என்றார்.
மேலும், ‘'ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் முடிவு எடுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர், ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை மதசார்பற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என பொதுவாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தோழமை கட்சி என்ற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கேட்கவில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்ற முயற்சிக்கிறது. இந்த பேராபத்தை தடுக்கும் வகையில் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைய வேண்டும்''என திருமாவளவன் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் திருமாவளவனிடம், ‘'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. ஆதரவு கேட்டால் ஆதரிப்பீர்களா?'' என கேட்டதற்கு, ''கேட்கட்டும் சொல்கிறேன்'' என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘திமுக விடுதலை சிறுத்தைகளை புறக்கணிக்கிறதா?' என்ற கேள்விக்கு, ''ஏற்காடு இடைத்தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் கடிதம் எழுதி ஆதரவு கேட்கப்பட்டது'' என திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications