ஆர்.கே.நகரில் சுணக்கம் காட்டும் திமுக.. வெல்லும் வாய்ப்பை வீணடித்துவிடுமா?
ஆர்.கே.நகரில் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஸ்டாலினே பார்க்க வேண்டியுள்ளது, பிரசாரத்திலும் அவரையே திமுக முழுக்க சார்ந்துள்ளது.
சென்னை: மத்திய அரசால் ஏகப்பட்ட இடைஞ்சல்கள், கட்சி முடக்கம், கட்சி சின்னம் முடக்கம் என எத்தனையோ இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அணி தீயாய் வேலை பார்த்து வருகிறது.
அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் சென்டிமென்ட் பிரசாரங்கள், அதிரடி புகார்களை அள்ளி வீசுவது என ஓ.பி.எஸ் அணியும் பரபரப்பாக உள்ளது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகளுக்கு நடுவேயான போட்டியாகத்தான் இது தெரிகிறது.
ஆனால் அல்வா போல ஒரு வாய்ப்பு கிடைத்தும் திமுகவின் தேர்தல் பிரசாரம் சுணக்கமாகவே உள்ளது. தினகரனை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.செயல்படவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கோரிக்கைவிடுக்க தொடங்கியுள்ளனர்.

கள நிலவரம்
திமுகவின் செயல்பாடு சில விஷயங்களில் முந்தைய தேர்தல்களைவிட வேகமாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை என்கிறது கள நிலவரம்.

பிரசாரம்
தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, பிரசாரத்திற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுக் கொடுப்பது போன்ற ஏற்பாடுகளில் கூட தொய்வு உள்ளதாம். இதையெல்லாம் நிர்வாகிகள் முறையாக செய்யாமல், பேச்சாளர்களைக் காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

ஸ்டாலின் கவனத்திற்கு
பிரச்சாரப் பொறுப்பாளர், கட்சி வக்கீல்கள் தொடங்கி, மாவட்டச்செயலாளர் வரை பேச்சாளர்கள் புகார் தெரிவித்து பார்த்துவிட்டனர். ஆனால் யாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குமுறல் வெளிப்படுகிறது. இதனால் நேரடியாக ஸ்டாலினுக்கே இப்பிரச்சினையை கொண்டு செல்ல திமுக பேச்சாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்தும் ஒருவரே
ஆர்.கே.நகரில் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஸ்டாலினே பார்க்க வேண்டியுள்ளது, பிரசாரத்திலும் அவரையே திமுக முழுக்க சார்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சி வேகம் எடுக்காவிட்டால் ஜூ.வி. சர்வே கூறியதை போல திமுக இங்கு தோல்வியைத்தான் தழுவ வேண்டிவரும் என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications