எங்கள் எதிரி திமுகதான்... 2021லும் அதிமுக ஆட்சி அமையும் - டிடிவி தினகரன்
சென்னை: அதிமுக மீண்டும் 2021 சட்டசபைத் தேர்தலில் வென்று தமிழகத்தில் ஆட்சியை தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். கட்சியிலும் ஆட்சியிலும் குடும்ப ஆதிக்கம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் எதிரி என்றைக்குமே திமுகதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் திமுக உறுப்பினர்கள் கலவரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர் என்றார். அதிமுக உறுப்பினர்களின் ஒற்றுமையினால் திமுகவினர் சதி முறியடிக்கப்பட்டதாகவும் தினகரன் தெரிவித்தார்.
மீண்டும் வெல்வோம்
ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக வெல்லும் என்றும் 2012ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
ஸ்டாலின் விரக்தி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கட்சி யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களே போட்டியிடுவார் என்று கூறிய டிடிவி தினகரன், கட்சியிலும், ஆட்சியிலும் குடும்ப ஆதிக்கம் இருக்காது என்றார். ஸ்டாலின் தோல்வி விரக்தியில் இருப்பதாகவும் கூறினார்.
எதிரி திமுகதான்
எம்ஜிஆர், ஜெயலலிதாவினால் தீய சக்தி என்று கூறப்பட்ட திமுகதான் எங்களின் பிரதான எதிரி. ஸ்டாலின் தினமும் ஸ்டண்ட் அடிக்கிறார் என்றும் தினகரன் குறிப்பிட்டார். அதிமுக என்ற எஃகுக் கோட்டையை யாராலும் எதுவும் செய்து விட முடியாது என்றார்.
தாய்கழகம்
அதிமுக என்ற தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.
ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதற்கு, யாராக இருந்தாலும் திரும்ப வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நான் புதியவன் அல்ல
அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள். நான் திடீரென அதிமுகவுக்கு வந்தவன் அல்ல. ஜெயலலிதா அப்போதே எனக்குப் பல பதவிகளை வழங்கினார். ஜெயலலிதா கூறியதால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தேன். மக்களின் கோபம் என்பது பொய் பிரச்சாரம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.