கூட்டணி வைக்க முடியாத ஏமாற்றத்தில் தேமுதிகவை உடைக்க திமுக சதி: ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: திமுகவோடு எப்படியாவது தேமுதிகவை கூட்டணி வைக்க இழுத்துவிட வேண்டும் என்ற திமுகவின் சதிதான், சந்திரகுமார் உள்ளிட்டோரை வைத்து கட்சியை உடைக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவோடு, தேமுதிக கூட்டணி வைத்தாக வேண்டும், நாளை பிற்பகலுக்குள் இந்த முடிவை விஜயகாந்த் அறிவிக்க வேண்டும் என்று 10 மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இன்று மதியம் பேட்டியளித்தார். இவரோடு மேலும் 2 எம்.எல்.ஏக்களும் பேட்டியின்போது உடனிருந்தனர்.

தேமுதிக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: தேமுதிகவை எப்படியாவது திமுகவோடு கூட்டணி வைக்க செய்ய வேண்டும், அப்போதுதான் ஜெயிக்க முடியும் என்று திமுக வெகுகாலமாக முயன்று வந்தது.
ஆனால், விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைக்க முன்வந்தார். இதை ஜீரணிக்க முடியாமல், தேமுதிக கட்சியை திமுக உடைக்க சதி செய்துள்ளது. அதன்விளைவுதான் இந்த பேட்டி.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தி வளர்ந்து வருகிறது என்பதை அக்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மாற்று சக்திகளை ஒழித்து கட்ட முயலுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் தமிழக மக்கள், அந்த இரு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பணம் படைத்தவர்கள் இதுபோல கட்சியை உடைக்கும் செயலில் இறங்குகிறார்கள்., ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற கீழ்த்தர செயலில் ஈடுபட்ட அவர்கள் இப்போது கட்சியை உடைக்கிறார்கள். இது வருங்கால தமிழக அரசியலுக்கு நல்லது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications