பல்லடம் மோடி பொதுக் கூட்டம்- நடு சாலையில் பாஜக கொடிகள்.. திமுக, அதிமுக கூட்டணியாக போலீசில் புகார்!
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்காக சாலையின் நடுவே பாஜக கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளதற்கு திமுக, அண்ணா திமுக நிர்வாகிகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக திமுக, அண்ணா திமுக நிர்வாகிகள் கை கோர்த்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்டங்களாக என் மண் என் மக்கள் பாதயாத்திரையை நீண்ட நாட்களாக நடத்தி வந்தார். இந்த பாதயாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பாஜக தொண்டர்கள் பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டமாக பல்லடம் கூட்டம் அமைய வேண்டும் என்பதற்காக பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே பல்லடம் மாதப்பூர் பொதுக் கூட்டத்துக்காக பாஜகவினர் கட்டியிருக்கும் கொடிக் கம்பங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று படைதிரட்டி சென்றனர். திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார், அதிமுக வழக்கறிஞர் அணி மகேஷ், மதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் கொங்கு ராஜேந்திரன், சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒன்றாக சென்றனர்.
பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து கொடுத்த புகார் மனுவில், சென்னை உயர்நீதிமன்றமானது அரசியல் கட்சிகள் நெடுஞ்சாலைகளில் சாலையின் மையப் பகுதியில் சென்டர் மீடியனில் கட்சி கொடிகளைக் கட்டக் கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் சாலையின் ஓரமாக கட்சி கொடி கம்பங்களை கட்டி வருகிறோம். ஆனால் பல்லடம் பாஜக பொதுக் கூட்டத்துக்காக பல்லடம் அண்ணா நகர் தொடங்கி பனப்பாளையம் வரையில் தாராபுரம் சாலையின் மையத்தில் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆகையால் பாஜக கொடிக் கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லாருமா ஒன்னு கூடிட்டாங்கப்பா!












Click it and Unblock the Notifications