பிரியாணி கடை பாணியில் மற்றொரு ஷாக்.. செல்போன் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி
Recommended Video

திருவண்ணாமலை: பிரியாணி கடை உரிமையாளரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் மக்கள் மனதில் மறையும் முன்பாக, திருவண்ணாமலை அருகே மொபைல் போன் கடை உரிமையாளர் திமுக பிரமுகரால் தாக்கப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் கடந்த ஜூலை 28ம் தேதி இரவு திமுக பிரமுகர் யுவராஜ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரியாணி கேட்டு தகராறு செய்து, குத்துச்சண்டை வீரர் போல் துள்ளி துள்ளி ஊழியர்களின் முகத்தில் குத்தினார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அடுத்த விவகாரம்
விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், யுவராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அப்போது செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், பிரியாணி கடைக்கு நேரில் சென்று கடை ஊழியர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் செல்போன் கடைக்குள் புகுந்து திமுக பிரமுகர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இளைஞரணி பொறுப்பு
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி குயிலம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (29). தண்டராம்பட்டு திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர், தனது செல்போனை பழுதுபார்க்க கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த கணேஷ் (26) என்பவருடன் தானிப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள மணிவண்ணன் என்பவரின் செல்போன் கடைக்கு சென்றுள்ளார்.

செல்போன் கடைக்காரர்
செல்போனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று திமுக ரகுபதி மிரட்டியுள்ளார். கடை உரிமையாளரோ, மறுநாள் வந்து வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திமுக பிரமுகரும், அவரது நண்பரும் சேர்ந்து நாற்காலிகளை எடுத்து கடை உரிமையாளரையும், ஊழியரையும் தாக்கினர். கடை உரிமையாளர் மணிவண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்தம் வடிந்தது.

சிசிடிவி காட்சிகள்
காயமடைந்த மணிவண்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பிரமுகர் செல்போன் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை போலீசில் அளித்த மணிவண்ணன் திமுக பிரமுகர் மீது தானிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

பரபரப்பு
வழக்குப்பதிவு செய்த போலீசார் திமுக பிரமுகர் ரகுபதி மற்றும் அவருடைய நண்பர் கணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. பிரியாணி ஹோட்டல் தகராறு போல, இந்த விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications