ஜெ.வை பாராட்டிய ஓ.பி.எஸ்: குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் குண்டு கட்டாக வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது குறுக்கிட்டு பேசியதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அமளியில் ஈடுபட்ட திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவைக்கு மீண்டும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் திரும்பினர்.
அப்போது ஆவின் பால் விலை உயர்வு பற்றி திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தேமுதிக கொறடா வி.சி சந்திரகுமார், திமுக உறுப்பினர் எ.வா வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசினர்.
பால் விற்பனை விலை உயர்வு எளிய மக்களை பாதிக்கும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அவர்கள் பேசினர். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா பதிலளித்தார்.
அமைச்சரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிய ஓ.பன்னீர் செல்வம், பால் விற்பனை விலை உயர்வுக்கான காரணங்களை பட்டியலிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் பேசும் போது குறுக்கீடு தொடர்ந்த காரணத்தால் ஜெ. அன்பழகனை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெ.அன்பழகனை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதனையடுத்து சட்டசபையில், தர்மபுரி பச்சிளம் குழந்தைகள் மரணம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.