நா கூசாமல் பேசுகிறார் எச்.ராஜா.. திமுக எம்.எல்.ஏ. பாய்ச்சல்
சென்னை: திமுக நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்தை விமர்சித்துள்ள பாஜக தலைவர் எச். ராஜா நா கூசாமல் பேசுவதாக திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கை:
சிறிதளவும் நாவு கூசாமல் பேசும் எச்.ராஜா அவர்களே, இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மருத்துவம் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழங்கள் எத்தனை? அவற்றில் எத்தனை நிறுவனங்களில் நீட் தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்தீர்கள்?
தாங்கள் சொல்லுவதற்கிணங்க பினாமி என்ற சொல்லை பயன்படுத்துவதென்றால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் மருத்துவ படிப்பு பயில இணையும் மாணவர்களிடம் திரட்டப்படும் லட்சக்கணக்கான பணத்திற்கு தாங்கள் தான் பினாமி என்பது போல் உள்ளதே.
நீட் தேர்வு மூலம் ஏழைகளும் மருத்துவ கல்வி பெறலாம் என்ற நிலையை உருவாக்கி விட்டதாக சூளுரைக்கும் தங்களது கட்சி, லட்சக்கணக்கில் பணம் ஏதும் செலுத்தாமல், நீட் தேர்வு மூலம், மிகக் குறைந்த செலவில் மருத்துவ படிப்பை பெற்றுள்ளதாக ஒரு ஏழை மாணவரைக் குறிப்பிட முடியுமா?
ஊழலை ஒழிப்பதாக ஊரை ஏமாற்றும் கோஷம் போட்டு, வெற்றி பெற்று, தற்போது ஊழலுக்கு சிறந்த உதாரணங்கள் எனப் பெயரெடுத்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பின்னால் தொங்கிக் கொண்டு பினாமியாக செயல்படுவதற்கு என்ன பொருள் என்பதை விளக்க முடியுமா? என்று அவர் கேட்டுள்ளார்.